கபிர் ஹாசிம் சர்வக்கட்சி அரசாங்கத்திற்கு ஆதரவளிப்பார் என தகவல்
20 நாடாளுமன்ற உறுப்பினர்கள் விரைவில் கட்சி தாவவுள்ளதாக அரசியல் தரப்புத் தகவல்கள் தெரிவிக்கின்றன.இவர்களில் பெரும்பாலானோர் எதிர்க்கட்சியில் இருந்து ஆளும் கட்சிக்கு தாவுவார்கள் எனவும் மேலும் சிலர் ஆளும் கட்சியில் இருந்து எதிர்க்கட்சிக்கு செல்வார்கள் எனவும் கூறப்படுகிறது.
சர்வக்கட்சி அரசாங்கத்திற்கு ஆதரவளிக்கும் கபிர் ஹாசிம்
தற்போது எதிரணியில் இருக்கும் அதாவுல்லா, ஜோன் செனவிரட்ன, சுதர்ஷனி பெர்னாண்டோபுள்ளே, ஜீவன் தொண்டமான், மருதபாண்டி ராமேஸ்வரன்,அசங்க நவரத்ன, சாமர சம்பத் தசநாயக்க, ஜயந்த ஹேரத் ஆகியோர் சர்வக்கட்சி அரசாங்கத்தில் இணையவுள்ளனர்.
அத்துடன் ஐக்கிய மக்கள் சக்தியை சேர்ந்த குமார வெல்கம, கபீர் ஹாசிம், மயந்த திஸாநாயக்க,ஜே.சி.அலவத்துவல,கிங்ஸ் நெல்சன் ஆகியோரும் சர்வக்கட்சி அரசாங்கத்திற்கு ஆதரவளிக்க வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது.
இதனிடையே தற்போது ஆளும் கட்சியில் அங்கம் வகித்து வரும் பேராசிரியர் ஜீ.எல்.பீரிஸ், நாலக கொடஹேவா, சன்ன ஜயசுமண, உதயன கிரிந்திகொட,வசந்த யாப்பா பண்டார, டிலான் பெரேரா, திலக் ராஜபக்ச, உபுல் கலப்பத்தி, சரத் குமாரசிறி, லலித் எல்லாவள ஆகியோர் புதிய நாடாளுமன்ற அமர்வின் போது எதிர்க்கட்சி வரிசையில் அமரவுள்ளனர்.
அதேவேளை ஸ்ரீலங்கா சுதந்திரக்கட்சி சர்வக்கட்சி அரசாங்கத்தில் இணையாவிட்டால், அந்த கட்சியை சேர்ந்த மூன்று பேரை தவிர ஏனையோர் சர்வக்கட்சி அரசாங்கத்திற்கு ஆதரவளிப்பார்கள் என தெரிவிக்கப்படுகிறது.
மொட்டுக்கட்சியி்ன் மூத்த உறுப்பினர்களுக்கு அமைச்சு பதவிகள்
மேலும் அடுத்த அமைச்சரவை மாற்றத்தின் போது ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவை சேர்ந்த மேலும் சில மூத்த உறுப்பினர்களுக்கு அமைச்சரவை அந்தஸ்துள்ள அமைச்சு பதவிகள் வழங்கப்படவுள்ளன.
இவர்களில் நான்கு முன்னாள் அமைச்சர்களும் அடங்குகின்றனர். இதனடிப்படையில், பவித்ரா வன்னியராச்சி, எஸ்.எம்.சந்திரசேன, எஸ்.பி.திஸாநாயக்க, சீ.பி.ரத்நாயக்க, ஜோன்ஸ்டன் பெர்னாண்டோ,ரோஹித்த அபேகுணவர்தன ஆகியோருக்கு அமைச்சு பதவிகள் வழங்கப்படவுள்ளன.
அதேவேளை ஐக்கிய தேசியக்கட்சியை சேர்ந்த ஒரே ஒரு நாடாளுமன்ற உறுப்பினரான வஜிர அபேவர்தனவுக்கு அரச நிர்வாகம் மற்றும் உள்நாட்டு அலுவல்கள் அமைச்சு வழங்கப்படவுள்ளது.