தென் எருவில் பற்று பிரதேச செயலக உத்தியோகத்தர்கள் 20 பேருக்கு கோவிட் தொற்று
மட்டக்களப்பு மாவட்டம் மண்முனை தென் எருவில் பற்று பிரதேச செயலக உத்தியோகத்தர்களுக்கு மேற்கொள்ளப்பட்ட கோவிட் தொற்று பரிசோதனையில் 20 பேருக்குத் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாகச் சுகாதாரத் துறையினர் தெரிவித்துள்ளனர்.
மட்டக்களப்பு மாவட்டம் மண்முனை தென் எருவில் பற்று பிரதேச செயலக உத்தியோகத்தர்கள் 60 பேருக்குக் கடந்த 4 ஆம் திகதி மேற்கொள்ளப்பட்ட கோவிட் தொற்று பரிசோதனையில் அவர்களில் 12 பேருக்கு கோவிட் தொற்று உறுதிப்படுத்தப்பட்டிருந்தது.
தொடர்ந்து 05 ஆம் திகதி அதே பிரதேச செயலகத்தில் கடமை புரியும் உத்தியோகத்தர்கள் 199 பேருக்கு மேற்கொள்ளப்பட்ட கோவிட் தொற்று பரிசோதனையில் 06 பேருக்குத் தொற்று உறுதிப்பட்டிருந்தது.
06 ஆம் திகதி உத்தியோகத்தர்கள் மற்றும் அவர்களது உறவினர்கள் அடங்கலாக 60 பேருக்கு மேற்கொள்ளப்பட்ட பரிசோதனையில் பிரதேச செயலக உத்தியோகத்தர்கள் 02 பேருக்கும், அவர்களது உறவினர்கள் 04 பேருக்கும் கோவிட் தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.
இது இவ்வாறு இருக்க தமது பிரதேச செயலக உத்தியோகத்தர்களுக்கு ஏற்பட்டுள்ள கோவிட் தொற்று காரணமாகக் கடந்த 05 ஆம் திகதி முதல் தமது பிரதேச பொதுமக்களுக்கான அரச சேவைகளைத் தற்காலிகமாக மறு அறிவித்தல் வரை வழங்க முடியாமலுள்ளது எனப் பிரதேச செயலாளர் அறிவித்துள்ளார்.
எனவே மட்டக்களப்பு மாவட்டம் மண்முனை தென் எருவில் பற்று பிரதேச செயலகம் கோவிட்
தொற்று காரணமாகக் கடந்த 5 ஆம் திகதி முதல் அரச சேவைகள் தற்காலிகமாக
இடைநிறுத்தப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கதாகும்.