சிறுமி விற்கப்பட்ட விவகாரம் - நான்கு இணையத்தளங்களுக்கு விரைவில் தடை
கல்கிஸ்சை பிரதேசத்தில் 16 வயது சிறுமி ஒருவர் இணையத்தினூடாக விற்பனை செய்யப்பட்ட சம்பவம் தொடர்பில் சிறுவர் மற்றும் மகளிர் பாதுகாப்பு காரியாலயத்தால் தொடர்ந்தும் விசாரணைகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாக பொலிஸ் ஊடக பேச்சாளர் தெரிவித்துள்ளார்.
இந்த விடயம் தொடர்பில் மேலும் அவர் தெரிவிக்கையில்,
இது தொடர்பில் இதுவரை 45 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். அதேபோல் மேலதிக விசாரணைகளில், இந்த சிறுமி இலங்கையில் பதிவு செய்யப்பட்டுள்ள 4 இணையதளங்களில் விற்பனை செய்யப்பட்டுள்ளமை தெரியவந்துள்ளது.
இது தொடர்பில் சிறுவர் மற்றும் மகளிர் பாதுகாப்பு காரியாலயத்தால் கொழும்பு நீதவான் நீதிமன்றுக்கு அறிவிக்கப்பட்ட பின் குறித்த இணையத்தளங்களை தடை செய்ய தேசிய தொலைத்தொடர்பு ஒழுங்குபடுத்தல் ஆணைக்குழுவுக்கு உத்தரவிடப்பட்டது.
இந்த இணையத்தளங்களை நடத்தி செல்லுதல், இந்த இணையத்தளங்களுக்குள் பிரவேசித்தல், இந்த இணையத்தளங்களுக்குள் தகவல்களை பதிவேற்றுதல் உள்ளிட்ட விடயங்கள் குற்றச்செயல்களாகும்.
இது தொடர்பில் சிறுவர் மற்றும் மகளிர் பாதுகாப்பு காரியாலயத்தால் தொடர்ந்தும் விசாரணைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்ற என குறிப்பிட்டுள்ளார்.