இலங்கையில் கோவிட் தொற்றினால் பாதிக்கப்பட்டிருந்த 11 பேர் சுட்டுக்கொலை! நாடாளுமன்றத்தில் பகீர் தகவல் (Video)
"மகர சிறைச்சாலையில் கோவிட் தொற்றினால் பாதிக்கப்பட்ட 11 பேர் சுட்டுக்கொல்லப்பட்டமை இந்த ஆட்சியின் போதே இடம்பெற்றது. சமூக ஊடகங்களில் கூறப்பட்ட விடயங்களுக்காக பலர் கைது செய்யப்பட்டமையும் மனித உரிமைகள் மீறலாகும்" என தேசிய மக்கள் சக்தி நாடாளுமன்றில் குற்றம் சுமத்தியுள்ளது.
இந்நிலையில், ஜனாதிபதியின் அக்கிராசன உரையின் போது நடைமுறை பிரச்சினைகள் எதற்கும் தீர்வுகள் வழங்கப்படவில்லை என அந்த கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் விஜித ஹேரத் தெரிவித்துள்ளார்.
நாடாளுமன்றிவ் இன்று உரையாற்றிய அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார். தொடர்ந்தும் பேசிய அவர்,
“ஜனாதிபதி, தமது உரையில், தமது அரசாங்கம் மனித உரிமைகளை மீறவில்லை என கூறியிருந்தார். எனினும், நாடாளுமன்றத்தை ஒத்தி வைத்தமையும், உள்ளூராட்சி மன்ற தேர்தலை ஒத்திவைத்ததையும் மனித உரிமை மீறல்களாகும்.
மகர சிறைச்சாலையில் கொரோனா தொற்றினால் பாதிக்கப்பட்டிருந்த 11 பேர் சுட்டுக்கொல்லப்பட்டமை இந்த ஆட்சியின் போதே இடம்பெற்றது. சமூக ஊடகங்களில் கூறப்பட்ட விடயங்களுக்காக பலர் கைது செய்யப்பட்டமையும் மனித உரிமைகள் மீறலாகும்.
பொலிஸ் காவலில் உள்ளவர்களின் ஆயுதங்களை மீட்பதாக கூறி அழைத்து செல்லப்பட்டு சுட்டுக்கொல்லப்பட்ட சம்பவங்களும் இந்த ஆட்சியில் இடம்பெற்றன.
இந்த நிலையில், பயங்கரவாத தடைச்சட்டத்தில் மாற்றங்களை செய்யப்பபோவதாக கூறுவதும், வடக்கு - கிழக்கு பிரச்சினைக்கு தீர்வு காணவுள்ளதாக கூறிய விடயமும் உண்மையானதல்ல.
இவை சர்வதேசத்துக்கு பொய்யை கூறி கடன்களை பெற்றுக்கொள்வதற்கான முயற்சியாகும்” என்று அவர் விஜித ஹேரத் தெரிவித்தார் .