இரு தரப்புகளும் யுத்தத்தின் போது மக்களுக்கு தீங்கு விளைவிக்கக் கூடாது என்ற அடிப்படைக் கொள்கைகளை கடுமையாக மீறியுள்ளனர் என நம்புவதற்கு வலிமையான சான்றுகள் உள்ளன. இவ்வாறு ஐக்கிய நாடுகளின் மனித உரிமை ஆணையாளர் நவநீதம்பிள்ளை தெரிவித்துள்ளார்.
ஜெனிவாவில் ஐக்கிய நாடுகள் சபை மனித உரிமைக் கவுன்ஸிலில் இலங்கை குறித்து நேற்று நடைபெற்ற கூட்டத் தொடரை ஆரம்பித்து வைத்து உரையாற்றும் போதே மேற்கண்டவாறு தெரிவித்தார்.
அவர் அங்கு மேலும் பேசியவை வருமாறு:
சமீபத்தில் இலங்கையில்மீறப்பட்ட சர்வதேச மனிதாபிமானச் சட்டங்கள், மனித உரிமை மீறல்கள் குறித்து தீவிரமாக ஆராய்வதற்கும், இவை எவ்வாறு நடந்தன, எவ்வளவு மோசமாக இடம்பெற்றுள்ளன, இவற்றுக்கு யார் காரணம் ஆகியவற்றை உறுதி செய்வதற்கு சுயாதீனமான நம்பகத் தன்மையுடைய சர்வதேச விசாரணைகள் நடத்தப்பட வேண்டும்.
இலங்கையில் நடைபெற்ற இறுதி யுத்தத்தின்போது பொதுமக்கள் மீது மேற்கொள்ளப்பட்ட தாக்குதல் தொடர்பாக சர்வதேச விசாரணைகள் நடத்தப்பட வேண்டும்.
இரு தரப்புகளும் யுத்தத்தின் போது மக்களுக்கு தீங்கு விளைவிக்கக் கூடாது என்ற அடிப்படைக் கொள்கைகளை கடுமையாக மீறியுள்ளனர் என நம்புவதற்கு வலிமையான சான்றுகள் உள்ளன.
அதேவேளை, தமிழீழ விடுதலைப் புலிகள் பொதுமக்கள் வெளியேறுவதைத் தடுத்தனர். அத்துடன் அவர்களை மனிதக் கேடயங்களாகப் பயன்படுத்தினர்.
இலங்கை அரசு பொதுமக்கள் வாழும் பகுதிகள் மீது கனரக ஆயுதங்களைப் பயன்படுத்தியது. சரணடைய வந்த போராளிகளை இராணுவத்தினர் சுட்டுக் கொன்றனர் என்பன எமக்கு கவலையளிக்கின்றன என்றார். |