பொருளாதார அபிவிருத்தி அமைச்சர் பசில் ராஜபக்ஷவின் தலைமையிலான இந்த உயர்மட்டக் குழுவில், பாதுகாப்பு செயலாளர் கோத்தபாய ராஜபக்ஷ, ஜனாதிபதியின் பிரத்தியேக செயலாளர் லலித் வீரதுங்க ஆகியோர் உள்ளடக்கப்பட்டுள்ளனர்.
இந்த விஜயம் எதிர்வரும் ஆகஸ்ட் மாதத்தின் நடுப்பகுதியில் இடம்பெறலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.
ஆகஸ்ட் மாதத்தின் ஆரம்பத்தில் பசில் ராஜபக்ஷ ஜப்பானுக்கான விஜயம் ஒன்றை மேற்கொள்கிறார். அந்த விஜயத்தை நிறைவு செய்துகொண்டு இலங்கை வந்ததன் பின்னர், அவர் இந்தியா செல்லலாம் என கூறப்படுகிறது.
அத்துடன் தற்போது அமெரிக்காவில் உள்ளதாக கூறப்படும் கோத்தபாய ராஜபக்ஷ, இந்த விஜயத்தின் நிமித்தம், ஆகஸ்ட் மாத ஆரம்பத்தில் நாடுதிரும்புவார் என எதிர்பார்க்கப்படுகிறது.
இந்த குழுவின் இந்திய விஜயத்தின் போது, இடம்பெயர்ந்த தமிழ் மக்களுக்காக அரசாங்கம் மேற்கொண்டுள்ள நடவடிக்கைகள் குறித்து தெளிவுப்படுத்தப்படும் என தெரிவிக்கப்படுகிறது.
அத்துடன், சர்வதேச ரீதியாக ஐக்கிய நாடுகள் சபையின் இலங்கை தொடர்பிலான நிபுணர்கள் குழு தொடர்பிலும் இந்த குழு ஆராய்வு மேற்கொள்ளும் என தகவல்கள் தெரிவிக்கின்றன.
இதேவேளை தமிழக முதல்வர் கருணாநிதி, பிரதமர் மன்மோகன் சிங் அவர்களுக்கு அனுப்பிய கடிதத்தில் இலங்கைத் தமிழர்கள் மீள்குடியேற்றம் தொடர்பான நடவடிக்கைகளை பார்வையிட விஷேட பிரதிநிதி ஒருவரை அனுப்பிவைக்கவேண்டுமென கோரிக்கை விடுத்திருந்தமை குறிப்பிடத்தக்கது.
|