இன்று காலை சிறைக்காவலர் ஒருவர் தமிழ் கைதி மீது தாக்குதல் நடத்தியதாகவும் இதனையடுத்து அங்கு தடுத்து வைக்கப்பட்டிருக்கும் சுமார் 380 தமிழ் கைதிகளும் ஆட்சேபனை தெரிவித்ததை தொடர்ந்து தமிழ் கைதிகள் மீது சிங்கள கைதிகள் தாக்குதல்களை நடத்தியதாகவும் தற்போதும் இந்த தாக்குதல் தொடர்வதாக சிறைக்கைதி ஒருவர் தெரிவித்துள்ளார்.
சிங்கள கைதிகள் தமிழ் கைதிகள் மீது தாக்குதலை நடத்தும் போது சிறைக்காவலர்கள் அதை தடுப்பதற்கு எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை என்றும் சிங்கள கைதிகளின் தாக்குதல்களுக்கு ஒத்துழைப்பு வழங்கி வருவதாகவும் தமிழ் கைதிகள் தெரிவிக்கின்றனர்.
காயமடைந்த தமிழ் கைதிகளை வைத்தியசாலைக்கு எடுத்து செல்வதற்கும் இதுவரை நடவடிக்கை எடுக்கப்படவில்லை என அவர்கள் தெரிவிக்கின்றனர்.
இது தொடர்பாக தமிழ் தேசியக் கூட்டமைப்பு நாடாளுமன்ற உறுப்பினர்களான திரு பா.அரியநேத்திரன், பொன் செல்வராசா ஆகியோர் புனர்வாழ்வு மற்றும் சிறை சீர்திருத்தத் துறை அமைச்சர் திரு டியூ குணசேகர மற்றும் சிறைச்சாலை ஆணையாளர் ஆகியோருடன் தொடர்பு கொண்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
தமிழ் கைதிகளிடம் இருந்து கையடக்க தொலைபேசிகள் மீட்பு
கொழும்பு சிறைச்சாலையில் இன்று மேற்கொள்ளப்பட்ட திடீர் சோதனையில் அதிக அளவிலான கையடக்கத் தொலைபேசிகள் மீட்கப்பட்டுள்ளதாக பொலிசார் தெரிவிக்கின்றனர்.
கைதிகளை பார்வையிடுவதற்காக வெளி இடங்களில் இருந்து வருகின்றவர்கள் பல்வேறு தடைசெய்யப்பட்ட பொருட்களை வழங்கிவருவதாக வெளியான தகவலை அடுத்தே இந்த சோதனை நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.
இதன் போது விடுதலைப்புலிகளுடன் தொடர்புடையவர்கள் என்ற சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்பட்டுள்ளவர்களிடம் இருந்து பல கையடக்க தொலைபேசிகள் மீட்கப்பட்டுள்ளன.
இந்த தகவலை சிறைச்சாலை ஆணையாளர் மேஜர் ஜெனரல் வீ. ஆர். சில்வா தெரிவித்துள்ளார்.
இதனை அடுத்து அங்கு தடுத்து வைக்கப்பட்டுள்ள தமிழ் கைதிகளுக்கும், சிங்கள கைதிகளுக்கும் இடையில் மோதல் ஒன்று இடம்பெற்றுள்ளதாக கூறப்படுகிறது.
எனினும் இது தொடர்பிலான மேலதிக தகவல்களை வழங்க சிறைச்சாலை அதிகாரிகள் மறுத்துள்ளனர்.
இதேவேளை சிறைசாலைக்கு கைதிகளை பார்வையிடுவதற்கு வருகின்றவர்களை பதிவு செய்வதற்கான நடவடிக்கைகளை புதிய முறையில் மேற்கொள்ளவிருப்பதாக சிறைசாலை ஆணையாளர் குறிப்பிட்டுள்ளார். |