அவுஸ்திரேலிய வார இதழ் ஒன்று இந்த செய்தியை வெளியிட்டுள்ளது.
அவுஸ்திரேலியாவில் தீவிரவாத போக்கு இயக்கங்களோ அல்லது இனப்பிரச்சினையை தூண்டும் அமைப்புகளோ இல்லை என அவுஸ்திரேலிய அரசாங்கம் திட்டவட்டமாக அறிவித்து வருகிறது.
எனினும் குறிப்பாக அவுஸ்திரேலியாவின் கென்பரா நகரில் வசிக்கின்ற தமிழர்களால் விடுதலைப்புலிகள் மீள எழுவதற்கான உதவிகள் வழங்கப்படுவதாக சில ஊடகங்கள் தெரிவித்துள்ளன.
குறிப்பாக அகதி அந்தஸ்த்து கோரி வரும் இலங்கை தமிழர்கள் பலர் தமிழீழ விடுதலைப்புலிகளுடன் தொடர்புடையர்களாக காணப்படுவதாக சில தரப்பில் குற்றம் சுமத்தப்படுகிறது.
எவ்வாறாயினும் தமிழர்கள் அனைவரும் விடுதலைப்புலிகளுடன் தொடர்புடையவர்கள் இல்லை என்றும் சிலர் கருத்து வெளியிட்டுள்ளனர்.
இந்த நிலையில் அமெரிக்காவின் எப்.பி.ஐ அமைப்பினால் அனுப்பி வைக்கப்பட்டுள்ள அறிக்கையில் விடுதலைப்புலிகளை ஊடுறுவதற்கு அனுமதிக்க வேண்டாம் என கோரப்பட்டுள்ளதாக அந்த நாளிதழ் செய்தி வெளியிட்டுள்ளது.
தமிழீழ விடுதலைப்புலிகள் என்ற இயக்கம் உலகின் மிகவும் தீவிரமான இயக்கம் என எப்.பி.ஐ இன் அறிக்கையில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.
உலகெங்கிலும் தமது வலையமைப்பினை கொண்டிருந்த தமிழீழ விடுதலைப்புலிகள் அமைப்பு தற்கொலை படையினர் என்ற பிரிவை உருவாக்கி அதனை கிரமமாக கையாண்டதாக எப்.பி.ஐ தெரிவித்துள்ளது.
அத்துடன் பெண்களை போருக்கு மிகவும் நேர்த்தியான முறையில் பயன்படுத்திய ஒரே ஒரு இயக்கம் இதுவே எனவும் அந்த அறிக்கையில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
இரண்டு உலகத்தலைவர்களை தமது தற்கொலை படையினரை பயன்படுத்தி கொலை செய்தமை உலகின் வேறெந்த அமைப்பினராலும் மேற்கொள்ள முடியாத செயல் எனவும் அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதேவேளை எப்.பி.ஐ இன் இணையத்தளத்தில் வெளியிடப்பட்டுள்ள தகவலின் படி தமிழீழ விடுதலைப்புலிகள் இயக்கம் தொடர்ந்தும் இயங்கு கொண்டே இருக்கின்றது.
குறிப்பாக அமெரிக்கா, அவுஸ்திரேலியா போன்ற நாடுகளில் தொடர்ந்தும் செயல்பட்டு வருவதாகவும் அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது. |