இச் சம்பவத்தில் கொல்லப்பட்டது தமிழ் இளைஞன் என்பதால் நியாயமான விசாரணைகள் நடைபெறுவதென்பது சந்தேகமான விடயமென்றும் அவர் குறிப்பிட்டார்.
பம்பலப்பிட்டி கடற்கரையில் இளைஞர் ஒருவர் தாக்கப்பட்டு, கடலில் தள்ளிக் கொலை செய்யப்பட்ட சம்பவம் தொடர்பில் கருத்துத் தெரிவிக்கையிலேயே எஸ். பி. திஸாநாயக்க இவ்வாறு தெரிவித்தார்.
இது தொடர்பாக மேலும் அவர் கூறுகையில், நாளுக்கு நாள் பொலிஸாரின் அராஜகங்கள் தொடர்ந்த வண்ணம் உள்ளன. அங்குலானையில் இரு இளைஞர்கள் கொலை செய்யப்பட்டனர். அதற்கு முன்பும் பல சம்பவங்கள் இடம்பெற்றன.
இன்று மனநோயாளியான இளைஞர் ஒருவர் கையெடுத்துக் கும்பிட்ட போதும், ஈவிரக்கமின்றி பொது மக்கள் பார்த்துக்கொண்டிருக்கையில் மிலேச்சத்தனமாகத் தாக்கப்பட்டு கடலில் தள்ளிக் கொல்லப்பட்டுள்ளார்.
எனவே, இக்கொலை தொடர்பாக நீதியான விசாரணைகளை மேற்கொண்டு குற்றவாளிகள் தண்டிக்கப்பட வேண்டும். கொல்லப்பட்டது தமிழ் இளைஞன் என்பதால் நீதியான விசாரணைகள் நடத்தப்படுமா என்பது சந்தேகமே. ஆனால், இதற்கு இடமளிக்கலாகாது.
அனைவரும் அநீதிக்கு எதிராகக் குரல் கொடுக்க வேண்டும். அமைச்சர்கள் தமது தவறான நடவடிக்கைகளை முன்னெடுப்பதற்கு பொலிஸாரைப் பயன்படுத்துகின்றனர். இதனால், குற்றமிழைக்கும் பொலிஸாரைப் பாதுகாக்க வேண்டிய நிலைமை ஏற்படுகின்றது.
பொலிஸார் சிலர் அரசாங்கத்திற்கு சார்பாக செயற்படுகின்றனர். இதனால், அவர்கள் குற்றமிழைக்கும் பட்சத்தில் பாதுகாக்கப்படுகின்றனர். இதன் காரணமாக, எந்தப் பயம் இன்றி கொலைகள், தாக்குதல்கள் என்பன பட்டப்பகலில், அதுவும் பொதுமக்கள் முன்னிலையில் இடம்பெறுகின்றன.
இதற்கு முற்றுப்புள்ளி வைக்காவிட்டால், நாடு முழுவதும் கொலைக் கலாசாரம் தலைதூக்கும். அதன் பின்னர் நாட்டில் ஒழுக்கமுள்ள, நீதியான சமூகத்தைக் கட்டியெழுப்ப முடியாது போகும்'' என்றார்.
|